ஒரே பாடசாலையில் பத்துவருட சேவை கொண்ட ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்

ஒரே தேசிய பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஒன்பதாயிரம் ஆசிரியர்களை அடுத்த வருடம் முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளின் பத்துவருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் கடமை புரியும் அனைத்து ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டு கடந்த வருடம் வரை அரசியல் அழுத்தங்களினால் இடைநிறுத்தப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் இம்முறை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக கடந்த வருடமும் அதற்கு முன்னரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய அதிகாரியின் தலையீட்டினால் கொழும்பு பிரதான பாடசாலைகளில் இவ்வாறான ஆசிரியர்களின் இடமாற்றத்தை அமைச்சு இடைநிறுத்த வேண்டியிருந்தது. இவ்வாறான ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனைத்து இடமாற்றங்களும் ஆசிரியர் இடமாறுதல் சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமுல்படுத்தப்படுவதாகவும், இவ்வாறு தீர்மானிக்கப்படும் இடமாற்றங்கள் இம்முறை எவ்வித தலையீடும் இன்றி நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.